சென்னை:
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது.
அங்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இந்த பெருந்துயரில் தமிழகமும், தமிழக மக்களும் பங்கெடுக்கிறோம்.
இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளை மீட்க அயலகத் தமிழர் நலன், மறுவாழ்வுத் துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நவ.11-ம் தேதி முதல்கட்டமாக 113 ஆண்கள், 60 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 177 பேர் தமிழகத்துக்கு திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு மத்திய அரசின் மூலம் உணவுப் பொருட்கள், மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி, அவர்கள் மீண்டெழுவதற்கு உதவிக்கரம் நீட்ட தமிழக அரசு தயாராக இருக்கிறது.
இதற்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைக்குமாறு தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.