ஹைதராபாத்:
சையது முஸ்டாக் அலி டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று ஹைதராபாத் உப்பால் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் – பெங்கால் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் குவித்து மிரட்டியது.
சையது முஸ்டாக் அலி தொடரின் வரலாற்றில் இது 2-வது அதிகபட்ச ரன் குவிப்பாக அமைந்தது. இதற்கு முன்னர் 2024-ம் ஆண்டு பரோடா அணி சிக்கிமுக்கு எதிரான ஆட்டத்தில் 349 ரன்கள் குவித்திருந்தது.
தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 52 பந்துகளில், 16 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 148 ரன்கள் விளாசினார்.
முகமது ஷமி, ஆகாஷ் தீப் ஆகியோரது பந்து வீச்சை அபிஷேக் சர்மா வெளுத்து வாங்கினார்.மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசினர்.
அபிஷேக் சர்மா பிரப்சிம்ரன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.3 ஓவர்களில் 205 ரன்களை வேட்டையாடியது.
இறுதிகட்டத்தில் மட்டையை சுழற்றிய ரமன்தீப் சிங் 15 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் சேர்த்தார். அபிஷேக் சர்மா தனது அரை சதத்தை 12 பந்துகளில் விளாசியிருந்தார்.
இதன் மூலம் ஆடவர் டி 20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த 3-வது வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா பகிர்ந்து கொண்டார். 311 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பெங்கால் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்களே எடுக்க முடிந்தது.
அதிகபட்சமாக கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 66 பந்துகளில். 13 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 130 ரன்கள் சேர்த்தார். 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.