திருப்பதி:
திருப்பதியில் இனி சாமானிய பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று நேற்று நடந்த குடியரசு தின விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
77-வது குடியரசு தின விழாவினையொட்டி, நேற்று திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில், நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் ஐஏஎஸ், தேசிய கொடியேற்றி பேசியதாவது:
உலக பிரசித்தி பெற்ற தார்மீக அறக்கட்டளையான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சாமானியர்களுக்கு முன்னுரிமை வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு நடந்த பிரம்மோற்சவத்தை வெற்றிகரமாக நடத்தினோம். அதில் 28 மாநிலங்களை சேர்ந்த 6,976 கலைஞர்கள் பங்கேற்று வெகு சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினர்.
முதன்முதலாக இந்த முறை வைகுண்ட ஏகாதசிக்கு முதல் 3 நாட்கள் குலுக்கல் முறையில் ஆன்லைன் டிக்கெட்டுகளை வழங்கி, சிறப்பாக தரிசன ஏற்பாடுகளை செய்தோம்.
மீதமுள்ள 7 நாட்களும் சாமானிய பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். இதேபோல் ரத சப்தமிக்கும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் வாகன சேவைகளை கண்டுகளித்தனர்.
1985-ல் முதன் முறையாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினோம். தற்போது தினமும் சராசரியாக 2 லட்சம் பக்தர்களுக்கு தரமான அன்னபிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி, பிசி காலனிகளில் 5,000 ஸ்ரீநிவாசர் திருக்கோயில்கள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோயமுத்தூர், மும்பை, கர்நாடகா, அசாம், உள்ளிட்ட இடங்களில் வரும் ஜூன் மாதத்திற்குள் ஏழுமலையான் கோயில் கட்ட பூமி பூஜை நடத்தப்படும்.
கோயமுத்தூரில் ரூ.300 கோடியில் ஏழுமலையான் கோயில் கட்ட நிதி உதவி செய்ய ஒரு பக்தர் முன் வந்துள்ளார்.
அலிபிரி அருகே ரூ.460 கோடி செலவில் ஒருங்கிணைப்பு டவுன் ஷிப் கட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் சிறப்பாக பணியாற்றிய 31 தேவஸ்தான அதிகாரிகள், 266 ஊழியர்களுக்கு தலா 5 கிராம் வெள்ளி பதக்கமும், நற்சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகளும், தேவஸ்தான பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அமராவதியில்..: ஆந்திர தலைநகர் அமராவதியில் முதன் முறையாக நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
ஆளுநர் அப்துல் நசீர் தேசிய கொடியேற்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு பங்கேற்றார்.