முருகப்பெருமானுக்கு 3 நாட்களில் கடைப்பிடிக்கப்படும் விரதங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும். அவை வாரவிரதம், நட்சத்திர விரதம், திதி விரதம் ஆகியவை ஆகும். வாரந்தோறும் வரும் செவ்வாய் கிழமைகளில் இருப்பது வார விரதமாகும்.

மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திர நாட்களில் இருக்கும் விரதம் நட்சத்திர விரதம் ஆகும். திதிகளில் சஷ்டி திதி வரும் நாட்களில் விரதம் இருப்பது திதி விரதமாகும்.
முருகன் மந்திரம்
ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா, சிவசக்தி பாலகனே, சண்முகனே, சடோக்சரனே, என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
-அகத்தியர்
மந்திர பாராயணத்தின் சிறப்பு
தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானை அவருக்குரிய விரத நாட்களில் மனமுருகி பிரார்த்தனை செய்து வழிபட்டு வந்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும்.
முருகனுக்குரிய விரத நாட்களில் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முகக் கவசம், கந்த புராணம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் போன்ற முருகனுக்குரிய மந்திரங்களை பாராயணம் செய்வது முருகனின் மனதை குளிரச்செய்து, வேண்டிய வரங்களைப் பெற நமக்கு துணை செய்யும்.
திருமுருகன் வழிபாடுகள்
தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்களில் முருகப்பெருமானை வழிபட்டால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என ஆன்மிகப் பெரியவர்களும் அனுபவ ரீதியாக உணர்ந்த பக்தர்கள் பலரும் சொல்கிறார்கள்.
வேலை, திருமணம், குழந்தைப் பேறு, கடன், பண கஷ்டம், மனை மற்றும் வீடு தொடர்பான பிரச்சினைகள். நோய்கள், காரிய வெற்றி என சகல நலன்களையும் தரக்கூடியவர் முருகப்பெருமான் என்பது பக்தர்களின் நம்பிக்கை.