தேமுதிகவுடன் தேசிய கட்சித் தலைமை பேசிக்கொண்டு இருக்கிறது; நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம் – அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்!!

திண்டுக்கல்:
“தேமுதிகவுடன் தேசிய கட்சித் தலைமை பேசிக்கொண்டு இருக்கிறது. நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்” என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறும்போது, “அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தால் அரசு ஸ்தம்பித்துபோய் உள்ளது. தூய்மை ப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை இத்தனை நாள் செயல்படுத்தவில்லை. தற்போதுதான் ஞானோதயம் வந்ததா? இது ஏமாற்று வேலை.

மக்களிடம் என்ன கனவை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவது தான் மக்களின் கனவாக உள்ளது. பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். குரூப் 2 தேர்வு ஒத்திவைத்ததுதான் இந்த மோசமான ஆட்சிக்கு சாட்சி.

தேமுதிகவுடன் தேசியக் கட்சி பேசிக்கொண்டு இருக்கிறது. நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்.

அதிமுக கூட்டணிக்கு 60 சதவீத மக்கள் வந்துவிட்டார்கள். எங்களுடன் இருந்த பெரிய மனிதர் செங்கோட்டையன், அவரை முதலிடத்தில் வைத்திருந்தோம். தற்போது செங்கோட்டையனை நான்காவது, ஐந்தாவது இடத்தில் உட்காரவைத்து விட்டனர், அவரது நிலை தாழ்ந்துவிட்டது” என்று கூறினார்.

பிப்ரவரி 13-ம் தேதி மாநில அரசை எதிர்த்து 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *