சென்னை;
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
நாளை காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக கட்சி அலுவலகத்திற்கு வருகை தருகிறார்.

அப்போது அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து மறைந்த அ.தி.மு.க. தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியையும் ஏற்றி வைக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாளின் போது எத்தனையாவது பிறந்தநாள் என்பதை குறிக்கும் வகையில் கேக் தயாரிக்கப்பட்டு தலைமை கழகத்தில் வைத்து வெட்டப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் என்பதால் 78 கிலோ கேக்கையும் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்தில் வைத்து நாளை வெட்டுகிறார்.
இதன் பின்னர் அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்படுகின்றன. நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அ.தி.மு.க. சார்பில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.2000 வழங்கப்படும், ஆண்களுக்கும் இலவசமாக பேருந்து பயணம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நாளை முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் எதுவும் முடிவடையாத நிலையில் அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் உறுதியாகி இருப்பதாகவும் அது தொடர்பான விவரங்களையே எடப்பாடி பழனிசாமி நாளை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.