சேலம்:
குஜராத்தைக் காட்டிலும் தமிழகத்துக்கு அதிக ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை கொடுத்தவர் பிரதமர் மோடி என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் சேலத்தில் செயல்பட்டு வரும் இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.30 கோடியில் கட்டப்பட்டுள்ள கல்வி வளாகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் முன்னிலை வகித்தார். குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதிய கல்வி வளாகத்தை திறந்துவைத்துப் பேசியதாவது:
சேலம் கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி, பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக விளங்குகிறது. தற்போதைய காலத்துக்கேற்ப, நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்கள் கற்றுக் கொள்வது அவசியம்.
இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதிக்கு அமெரிக்கா 50 சதவீத கூடுதல் வரி விதித்ததும், தமிழகத்தைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் என்னை சந்தித்து, ஜவுளித் துறையின் எதிர்காலம் இருண்டு விட்டதாக தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினையை பிரதமர் கவனித்துக் கொள்வார் என்று நான் அவர்களுக்கு கூறினேன்.
ஜவுளி ஏற்றுமதி நகரங்கள்
ஐரோப்பிய கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை பிரதமர் ஏற்படுத்தியதன் மூலம் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், பிரதமரின் முயற்சியால், வரி குறைந்துள்ளது.
அமெரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் வரவுள்ளது. இதனால் சேலத்தைப்போல தமிழகத்தில் மேலும் பல ஜவுளி ஏற்றுமதி நகரங்கள் உருவாகும்.
பிரதமர் மோடி, குஜராத்தைக் காட்டிலும் தமிழகத்துக்கு அதிக ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைக் கொடுத்துள்ளார்.
ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொடுத்தார். இக்கல்லூரி அருகேயுள்ள ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், எம்.பி.க்கள் செல்வகணபதி, சிவலிங்கம், மத்திய கைத்தறி மேம்பாட்டு ஆணையர் பீனா, எம்எல்ஏ பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ் ணன் சான்றிதழ், பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.