மதுரை / புதுச்சேரி:
மதுரை, புதுச்சேரியில் நாளை (மார்ச் 1) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர், திருப்பரங்குன்றம் கோயிலுக்கும் செல்கிறார்.
இதையொட்டி, இன்று மாலை டெல்லியில் இருந்து சென்னை வரும் பிரதமர் மோடி இரவு சென்னையில் தங்குகிறார்.
காலையில் புதுச்சேரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் ஹெலிகாப்டரில் பிற்பகல் 2.45 மணியளவில் தஞ்சாவூர் செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு 3.30 மணியளவில் மதுரை வருகிறார்.
மதுரை விமான நிலைய வளாகத்தில் வான் கட்டுப்பாட்டு கோபுரத்தை திறந்து வைக்கும் பிரதமர், புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்கள், பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச் சாலை திட்டங்களை காணொலி வாயிலாகத் திறந்து வைக்கிறார்.
மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
மாலை 4.30 மணியளவில் மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பொதுக்கூட்டம் முடிந்து மதுரை விமானம் நிலையம் சென்று, அங்கிருந்து மாலை 6.10 மணியளவில் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
மண்டேலா நகரில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்துக்காக பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் வருகை யையொட்டி 20 எஸ்.பி.க்கள், 13 ஏடிஎஸ்பிக்கள், 35 டிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புதுச்சேரியில் நலத் திட்டங்கள்
முன்னதாக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புதுவைக்கு நாளை காலை 11:40 மணிக்கு பிரதமர் மோடி வருகிறார்.
அவரை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
பின்னர், கார் மூலம் விழா நடைபெறும் லாஸ்பேட்டைக்கு வந்து, அரசு நலத் திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசுகிறார்.
பிரதமர் வருகை முன்னிட்டு, மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி சேதராப்பட்டில் 50 ஏக்கரில் ரூ.1,100 கோடியில் ஜிப்மர் மருத்துவமனையின் மேம்பட்ட விபத்து சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் கட்டும் அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “புதுச்சேரியில் ரூ.2,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.