சென்னை:
தமிழகப் பொறுப்பு ஆளுநராக ஆர்.வி.அர்லேகருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநில ஆளுநராகவும், கேரள மாநில ஆளுநராக இருந்து வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் செயல்படுவார் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
ஆர்.வி.அர்லேகருக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலர் என்.முருகானந்தம், ஆர்.வி.அர்லேகரின் மனைவி அனகா அர்லேகர், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொறுப்பு ஆளுநராகப் பதவியேற்ற ஆர்.வி.அர்லேகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் ஆளுநர் அர்லேகருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து தனது பொது வாழ்க்கையைத் தொடங்கிய அர்லேகர், கடந்த 1989-ல் கோவா மாநில பாஜகவில் இணைந்து, கட்சி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்.
பின்னர், 2002-ல் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். கோவா மாநில சட்டப்பேரவைத் தலைவராகவும், மாநில பாஜக தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும், பிஹார், இமாச்சல் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.