கொல்கத்தா:
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.
இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் விளாசி மேட்ச் வின்னராக ஜொலித்தார்.
196 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 19.2 ஓவர்களில் எட்டியது. இதில் சஞ்சு சாம்சனின் பங்கு 97 ரன்கள். 50 பந்துகளில் இந்த ரன்களை அவர் எடுத்தார்.
அவரது இன்னிங்ஸில் 12 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இந்நிலையில், ஆட்டத்துக்கு பிறகு அவர் கூறியதாவது:
“பல ஆண்டுகளாக இந்த பார்மெட்டில் நான் விளையாடி வருகிறேன். விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி உள்ளிட்ட சிறந்த வீரர்களிடம் இருந்து ஆட்டம் சார்ந்து நிறைய கற்றுள்ளேன்.
அது எனது அனுபவத்துக்கு பெரிதும் உதவியது. அவர்கள் எப்படி விளையாடுவார்கள், ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப தங்கள் ஆட்ட பாணியில் மேற்கொள்ளும் மாற்றத்தையும் நான் பார்த்துளேன். அது எனக்கு உதவியது.
நான் விளையாட தொடங்கிய நாள் முதலே தேசத்துக்காக இது மாதிரியான இன்னிங்ஸ் ஆட வேண்டுமென விரும்பியது உண்டு. இது மிகவும் சிறப்பான பயணம். எனது கிரிக்கெட் வாழ்வில் ஏற்ற தாழ்வுகளை பார்த்து விட்டேன்.
‘என்னால் முடியுமா?’ என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. நான் இந்நேரத்தில் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
கடந்த ஆட்டத்தில் நாங்கள் முதலில் பேட் செய்தோம். இந்த ஆட்டத்தில் நாங்கள் இலக்கை விரட்டினோம். அதனால் இது வித்தியாசமான ஆட்டம்.
இது மாதிரியான ஸ்பெஷல் இன்னிங்ஸ் ஆடுவேன் என எண்ணவில்லை. இது எனது வாழ்நாளின் சிறந்த நாட்களில் ஒன்று என்பது நிச்சயம்” என்றார்.