மதுரை,
மதுரையில் கோபால் பல்பொடியை போலியாக தயாரித்து விற்று வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களது குடோனையும் சீல் வைத்தனர்.
பொதுமக்களின் அன்றான தேவை பொருட்களாக பல்பொடி, பேஸ்ட், சோப்பு, ஷேம்பு போன்ற பொருட்கள் இருந்து வருகிறது.
இதிலும் புகழ்பெற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள பொருட்களை போலியாக தயாரித்து விற்பனை செய்யக்கூடிய கும்பல்களும் நாட்டில் இருந்து வருகிறது.
அந்த வகையில் மதுரையில் நாடெங்கும் புகழ் பெற்ற கோபால் பல்பொடி தயாரிப்புகள் மற்றும் மற்ற நிறுவனங்களின் சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்களை போலியாக தயாரித்து கடைகளுக்கு ஒரு கும்பல் விற்று வருவதாக புகார் வந்த வண்ணம் இருந்தது.
இந்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சக்கி மங்கலம், மீனாட்சி நகர், சவுராஷ்ட்ரா 1- & வது காலனியை சேர்ந்த சுந்தரபாண்டியன் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் கோபால் பல்பொடி நிறுவனத்தின் தயாரிப்புகள் உள்ளிட்ட பொருட்களும் மேலும் மற்ற பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளான சோப்பு, பவுடர், தேயிலை, கொசுவர்த்தி சுருள் ஆகியவற்றை போலியாக தயாரித்து அந்த பொருட்களின் மீது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் லேபிள்களை பயன்படுத்தி பல கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
மேலும் சுந்தரபாண்டியன் கொடுத்த தகவலின்படி அதே பகுதியில் இருந்த குடோனில் போலீசார் அதிரடியாக ஆய்வு செய்தனர்.
அங்கு கோபால் பல்பொடி நிறுவனத்தின் தயாரிப்புகள், மற்றும் பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகள் குவியல் குவியலாக இருந்தது கண்டறியப்பட்டது.
அந்த பொருட்களை எல்லாம் பறிமுதல் செய்த போலீசார் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். இந்த போலி தயாரிப்பு கும்பலை கைது செய்த சம்பவம் மதுரையெங்கும் பரபரப்பாக பேசப்படுகிறது.