சென்னை:
ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில் பொய் சொல்லி குற்றவாளிகளை காப்பாற்ற முயன்ற பழனிசாமி, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் – மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் 9 போலீஸாரும் குற்றவாளிகள் என 6 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.
சாத்தான்குளம் சம்பவத்தை இரட்டை படுகொலை என்று விமர்சித்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தொடர் அழுத்தம் கொடுத்தார்.
பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இத்தனைக்கும் ஜெயராஜ், பென்னிக்ஸ் குற்றவாளிகள் அல்ல.
கரோனா ஊரடங்கு நேரத்தில் விதியை மீறி கடையை திறந்து வைத்திருந்தார்கள் என்பதுதான் அவர்கள் மீதான காவல் துறையின் குற்றச்சாட்டு.
மூச்சுக்கு முந்நூறு தடவை, கரோனா காலத்திலும் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம் என சொல்லும் பழனிசாமி, அந்த கரோனா காலத்தில்தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டன.
கரோனா காலத்தில் பழனிசாமியின் சிறப்பான ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி. காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்ட இருவரும், காவல் நிலைய விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், சில மணி நேரத்தில் இருவருமே அடுத்தடுத்து இறந்து போக, மூச்சுத்திணறல், உடல்நல குறைவு என்று வழக்கமான காரணத்தை சொல்லி கதையை முடிக்க பார்த்தது அன்றைக்கு ஆட்சியில் இருந்த பழனிசாமி அரசு. முதல்வரே பொய் சொல்லி காவல் துறையினரை காப்பாற்றினார்.
பாதிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இரண்டு அப்பாவிகளை நோயாளி ஆக்கிய மனசாட்சி இல்லாத மனிதர்தான் பழனிசாமி.
சாத்தான்குளம் கொடூர கொலை சம்பவத்தில் இன்றைக்கு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் மூடி மறைக்க நினைத்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் மூச்சுத்திணறல், உடல்நல குறைவால்தான் உயிரிழந்தனர் என பழனிசாமி சொன்ன பொய்யை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது.
குற்றவாளிகளை காப்பாற்ற அன்று பொய் சொன்ன பழனிசாமியும், ஒருவகையில் குற்றவாளிதான்.
பொய் சொல்லி குற்றவாளிகளை காப்பாற்ற முயன்ற பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.