சென்னை:
“திருநர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் என இயற்றப்பட்டுள்ள சட்டத்தைத் திருநர் சமுதாயத்தினரே எதிர்க்கிறார்கள் என்றால், அது ஏன் என்று ஆராய வேண்டுமே ஒழிய, அதனைத் திணிக்கக் கூடாது,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “யாருடைய உரிமைகளை, வாழ்வைப் பாதிக்கிறதோ, அவர்களது கருத்துகளையே கேட்காமல் திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தில் திருத்தங்களைத் திணிக்கக் கூடாது.
திருநர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் என இயற்றப்பட்டுள்ள சட்டத்தைத் திருநர் சமுதாயத்தினரே எதிர்க்கிறார்கள் என்றால், அது ஏன் என்று ஆராய வேண்டுமே ஒழிய, அதனைத் திணிக்கக் கூடாது.
ஒன்றிய பாஜக அரசு இம்முயற்சியை நிறுத்தி, திருநர்களுடன் கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் திருநர்களின் உண்மையான இசைவைப் பெற முயல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த மார்ச் 13-ஆம் தேதி மக்களவையில் திருநர் உரிமைகள் திருத்தச் சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது.
இந்த மசோதாவில் உள்ள சில அம்சங்கள் திருநங்கைகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அப்படி என்ன இருக்கிறது? இந்தச் சட்டத் திருத்தம் திருநர்களின் சுய அடையாள உரிமையை பறிப்பதாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டபடுகிறது.
அதாவது 2019 சட்டத்தில் இருந்த பாலினம் சார்ந்த ‘self-identification’ முறையை நீக்கி, மருத்துவ குழு சான்றிதழ் அவசியம் என மாற்றப்பட்டுள்ளது.
ஒருவர் தனது பாலின அடையாளங்களை தேர்வு செய்வதென்பது இயற்கைக்கு அப்பாற்பட்டு, அவர்களின் பாலின மாற்றம் குறித்து மருத்துவர்களிடம் சோதித்து சான்றாக பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.
மேலும், அதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து தான் திருநர் அடையாள உரிமை பெற வேண்டும் எனக் கூறுகிறது இச்சட்டம்.
அதுமட்டுமல்லாது, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்கும் பிரிவு இந்த மசோதாவில் மறுத்துள்ளதாகவும் திருநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.