கோவை ;
கோயம்புத்தூரைச் சேர்ந்த ‘ஒண்டர் கிட்ஸ்’ (Wonderkids) பள்ளியின் தாளாளர் திருமதி. ரீனா கார்த்திக், தென்னிந்திய சாதனையாளர் விருதுகள் 2025 (South India Women’s Achievers Award) விழாவில் ‘சிறந்த கல்வியாளர்’ (Best Educator) விருதைப் பெற்றுள்ளார்.
பெங்களூருவில் அண்மையில் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான விருது வழங்கும் விழாவில், சுமார் 200 கல்வியாளர்கள் மத்தியில் திருமதி. ரீனா கார்த்திக் இந்த அங்கீகாரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
சுமார் மூன்று தசாப்தங்களாகக் கல்வித் துறையில் தனது சிறப்பான சேவையை ஆற்றிவரும் அவர், பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதிலும், தரமான பாடத்திட்டங்களை வழங்குவதிலும் முன்னோடியாகத் திகழ்கிறார்.
இந்த விருது குறித்து அவர் கூறுகையில், “கோயம்புத்தூரை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த தேசிய அளவிலான விருதைப் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
எங்களது பள்ளியில் பின்பற்றப்படும் தனித்துவமான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர்களின் நலனில் நாங்கள் காட்டும் அக்கறை ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றிக்கு எனது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இந்த விழாவில் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவர்கள், பொறியாளர்கள், அழகியல் நிபுணர்கள் எனப் பல துறைகளில் சாதித்த பெண்களும் கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.