சென்னை:
மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் தமிழக அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘கடந்த 2021-23 கால கட்டத்தில் தமிழகத்தில் 45,000 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ முன்னாள் தலைவர் ராஜேஷ் லக்கானி, கொள்முதல் பிரிவு நிதி கட்டுப்பாட்டாளர் வி.காசி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரி அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசனும், சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி சேலம் இ.சரவணன், உசிலம்பட்டி ராஜ்குமார் ஆகியோரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நடந்து வந்தது.
அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ், இ.சரவணன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ராஜ்குமார் தரப்பில் வழக்கறிஞர் வேதவிகாஸ் ஆகியோரும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, டான்ஜெட்கோ தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் பி.குமரேசன் ஆகியோரும் வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பு விவரம்: புகார்களை லஞ்ச ஒழிப்புத் துறையும், ஊழல் தடுப்பு ஆணையமும் முறையாக விசாரிக்கவில்லை.
செந்தில் பாலாஜி, ராஜேஷ் லக்கானி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், காசிக்கு எதிராக மட்டும் விசாரணை நடத்தியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்பகட்ட விசாரணையை 20 மாதங்களாக நடத்தியுள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட யார் மீதும் வழக்கு பதியவில்லை.
சுதந்திரமான விசாரணை தேவை என்பதால் சிபிஐக்கு மாற்றுகிறோம்.
விசாரணைக்கு தமிழக அரசு, டான்ஜெட்கோ, லஞ்ச ஒழிப்புத் துறை ஒத்துழைப்பு தரவேண்டும்.
லஞ்ச ஒழிப்புத் துறை அனைத்து ஆவணங்களையும் 2 வாரங்களுக்குள் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ‘‘மின்மாற்றிகள் கொள்முதலில் அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை’’ என கோவையில் செந்தில் பாலாஜி நேற்று கூறினார்.