தமிழ்நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை பேணி காத்திட புதிய அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும்!! திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…..

சென்னை:
தமிழ்நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை பேணி காத்திட புதிய அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது.

படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை திமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

ஊடகங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்க வேண்டும் என்பதுடன், பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட விடாமல், அச்சுறுத்தி அவர்களின் எழுத்துரிமை மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுவதை திமுக என்றைக்கும் ஏற்றதில்லை.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது புதிய அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து அதன் மூலம் தமிழ்நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை பேணி காத்திடுவது அரசின் கடமை என்பது உணர்ந்து, முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் மீது புதியதாக பொறுப்பேற்றுள்ள மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *