சென்னை,
தனியார் துறையில் முதன்முறையாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தனியார் துறையில் முதன் முறையாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ. 15,000 ஊக்கத்தொகையாக வழங்கும் “பிரதமரின் விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா” திட்டத்திற்கு மேலும் ரூ. 2,400 கோடி நிதியை விடுவித்துள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊழியர்கள் மட்டுமன்றி, தகுதியான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் இத்திட்டத்தின் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நமது வீட்டின் இளைஞர்களையும் நாட்டின் பொருளாதாரத்தையும் ஒருசேர வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும் இத்திட்டத்தை நமக்கு அறிமுகப்படுத்தி, அதை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் நமது பாரதப் பிரதமரின் தொலைநோக்கு சிந்தனைக்கு தலை வணங்குகிறோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.