முதல்வர் விஜய் கூட்டியுள்ள கூட்டத்தின், அரசின் விருந்தில்தான் நாங்கள் கலந்து கொள்ளவில்லையே தவிர தவெக அரசுக்கான எங்கள் ஆதரவு தொடரும் – கம்யூனிஸ்ட் தலைவர்கள்!!

சென்னை:
“முதல்வர் விஜய்யை சந்தித்து ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம்.

முதல்வர் விஜய் கூட்டியுள்ள கூட்டத்தின், அரசின் விருந்தில்தான் நாங்கள் கலந்து கொள்ளவில்லையே தவிர தவெக அரசுக்கான எங்கள் ஆதரவு தொடரும்” என இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “முதல்வர் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.

உழைக்கும் மக்களின் கோரிக்கைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

சாலை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து ஒப்பந்த அடிப் படையில் பணிபுரியும் ஏழை, எளிய தொழிலாளர்களின் வாழ்விடங்கள், பணி பாதுகாப்பு குறித்து அரசு ஆழ்ந்த சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினோம்.

அதேபோல விவசாயிகள், அரசு ஊழியர்கள் சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் இருக்கின்றன. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுள்ளோம்.

முதல்வரும் அதை ஆவணம் செய்திருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல்வர் விஜய்யின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நாங்கள் ஆட்சியில் பங்கு பெறவில்லை; தோழமை கட்சியாக வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம்.

மக்கள் அதிகாரத்தை பாதுகாக்கவும், அது ஆளுநர் வசம் சென்றுவிடக்கூடாது என்கிற அரசியல் காரணங்களுக்காகவும் இருவரும் வெளியிலிருந்து பயணிக்கிறோம்.

ஒன்றிய அரசுடன் இருக்கும் நிர்வாக உடன்பாடு, இணக்கங்கள் என்பது வேறு; கொள்கை என்பது வேறு.

மாநிலங்களின் உரிமையை பறிக்கிற ஒன்றிய அரசின் கடந்த கால அணுகுமுறையை இன்றைய அரசு உணர்ந்திருக்கும்; அதிலிருந்து பாடங்களையும் பெற்றிருக்கும்; அங்கு சமரசம் கூடாது.

ஒன்றிய அரசின் திட்டங்கள் நாட்டை சீரழிக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் கார்பரேட் நலனுக்கானது.

அதை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை; மாநில உரிமை,தொழிலாளர்களின் நலனில் தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசும்போது; விஜய், முதல்வராக பதவி ஏற்றதற்கு பிறகு நடந்திருக்கும் முதல் சந்திப்பு இது.

அந்த வகையில் தமிழ்நாடு மக்கள் எதிர்நோக்கக்கூடிய முக்கிய கோரிக்கைகள், பிரச்சினைகள் சம்பந்தமாக அவர்களிடம் வலியுறு த்தி உள்ளோம், குறிப்பாக வேலையின்மை என்பது முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வகையில் ஏற்கெனவே உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அதில் கூடுதலாக கவனத்தை செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களால் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது.

தமிழக பட்ஜெட்டில் மக்கள் புதிய திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பொதுவாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சிங்கப்பெண் படை அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஏற்கனவே காவல் துறையில் இருந்தவர்கள்தான் பணி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சிங்கப் பெண் படையில் உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு முயற்சி எடுக்க வேண்டும்.

தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் என்பது மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான விதிகள் தமிழக அரசு சார்பில் இன்னும் உருவாக்கப்படவில்லை.

அந்த விதிகளை உருவாக்கும்போது தமிழ்நாட்டில் அனைத்து தொழிற்சங்க தலைவர்களை அழைத்து அவர்களோடு கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

பாஜக உருவாக்கி இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது. தொழிலாளர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதனை எக்காரணம் கொண்டும் அப்படியே அமல்படுத்தக் கூடாது. காவிரி பிரச்சினையில் முதல் தடவை, அரசுக்கும் பல கட்சிகளுக்கும் விவசாய சங்க கூட்டத்துக்கும் மாறுபட்ட கருத்து ஏற்பட்டிருக்கிறது.

இந்த மாத இறுதியில் நிதிநிலை அறிக்கை வெளியாகும் என சொல்லப்படுகிறது.

முதல்வர் விஜய் தலைமையிலான தோழமை கட்சிகள் கூட்டத்திலும், அரசின் விருந்திலும்தான் கலந்து கொள்ளவில்லை; மற்றபடி அரசுக்கான ஆதரவு என்பது தொடரும்.

மு.க.ஸ்டாலின் தவெக அரசு கவிழும் எனச் சொல்வது ஏற்புடையது அல்ல; அப்படியான சூழல் தமிழகத்தில் இல்லை. நாங்கள் உறுதியான ஆதவை தெரிவித்துள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *