சென்னை:
அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் என்பதை வலியுறுத்தி, மீண்டும் போராட்டக் களத்துக்கு தயாராவதாக, ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2003 ஏப். 1-ம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமும், ஓய்வூதிய காலப் பலன்களும் அறவே மறுக்கப்பட்டுள்ளது.
பணியாளர் பகுப்பாய்வுக் குழு என்ற ஒன்று அமைக்கப்பட்டு பணியிடங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கை என்பது, முன்பு எவ்வாறு வேலைநியமன தடைச் சட்டம் மூலம் அமல்படுத்தப்பட்டதோ, அதேபோல், வேறு வடிவில் அரசு பணியில் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பை முற்றிலுமாக பறிக்கக்கூடிய நிலையை உருவாக்கக் கூடிய திசை வழியை நோக்கி அரசு நிர்வாகம் சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஊதிய மாற்ற நிலுவை தொகை, நிதி ஆதாரம் இல்லை என்ற காரணத்தால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மறுக்கப்படுகிறது.
அந்த வகையில், ஏறக்குறைய 2003 போன்ற ஒரு சூழல்தான் தற்போதும் உள்ளது. நமது உரிமைகளை ஒன்று பட்டு கேட்க தவறினால், என்றுமே அவற்றை பெற முடியாது.
பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அனைவரும் பெற வேண்டுமானால், ஒன்றுபட்ட சக்தியாக களத்தில் நிற்க வேண்டும்.
2003 ஏப்.1-ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த நம் இளையோருக்கு ஓய்வூதியத்தை உத்திரவாதப்படுத்த கூடிய ஒரு ஜனநாயக அறவழி போராட்ட களத்தில் இளைய தலைமுறையோடு இணைந்து மீண்டும் களம் காண்போம்.
அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் என்ற புதிய சகாப்தத்தை படைக்கத் தயாராவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.