அரசு வழக்கறிஞரை நியமிக்க ரூ.5 முதல் 50 லட்சம் வரை அமைச்சர் நிர்மல் குமார் லஞ்சம் கேட்பதாக புகார் வந்துள்ளது!! நயினார் நாகேந்திரன்…..

சென்னை:
“தவெக அமைச்சர்கள் பலரின் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. ஆளும் கட்சி தரப்பினர் மீது பல்வேறு புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது.

அரசு வழக்கறிஞரை நியமிக்க ரூ.5 முதல் 50 லட்சம் வரை அமைச்சர் நிர்மல் குமார் லஞ்சம் கேட்பதாக புகார் வந்துள்ளது” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் அர்லேகரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்துப் பேசினார்.

அப்போது பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மூத்த நிர்வாகி நாராயணன் திருப்பதி ஆகியோர் இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் குழந்தைகளிடம் நடந்துகொண்ட முறை, தவெக அமைச்சரவை கூட்டத்தில் தனி நபர்களான விஷ்ணு ரெட்டியும், ஜான் ஆரோக்கிய சாமியும் கலந்து கொண்டது குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம்.

தவெக ஆட்சி பொறுப்பேற்ற 54 நாட்களில் 151 பாலியல் வன்கொடுமைகள், 85-க்கும் மேற்பட்ட படுகொலைகள், 80க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த கால திமுக அரசுக்கும், இப்போதைய தவெக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இதில் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து மனுவில் தெரிவித்துள்ளோம்.

உடனடியாக எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும் என சொல்லவில்லை.

தவெகவினரே பாலியல் தொந்தரவுகள் உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதன் மீது நடவடிக்கை எதுவும் இல்லை.

எல்லாவற்றுக்கும் வெள்ளை அறிக்கை கொடுக்கும் தவெக அரசு, தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமை, அதற்காக எடுத்த நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்னரே அமமுக எம்எல்ஏ காமராஜை குதிரை பேரம் மூலம் தங்கள் பக்கம் இணைத்தனர்.

இப்போது தொடர்ந்து எல்லா எம்எல்ஏக்களும் தவெக பக்கம் சென்றுகொண்டுள்ளனர்.

ஆட்சி அமைந்து 54 நாட்களில் இடைத்தேர்தல் வர அவசியமே இல்லை.

தவெக அமைச்சர்கள் பலரின் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. ஆளும் கட்சி தரப்பினர் மீது பல்வேறு புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. ஆனால், இதில் முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை.

அமைச்சர் நிர்மல் குமார் சட்டம் படித்துள்ளாரே தவிர, அவருக்கு சட்டம் பற்றி தெரியுமா எனத் தெரியவில்லை.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற மாட்டோம் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

நீதிமன்றம் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட பின்னும், முடியாது என சொல்லும் இவர் எப்படி சட்டத் துறை அமைச்சராக நீடிக்கிறார்.

ஆய்வு செய்ய ஆளுநருக்கு உரிமை இல்லை என அமைச்சர் நிர்மல் குமார் சொல்லியுள்ளார். அரசியலமைப்பு சட்டம் 167ன்படி ஆளுநர் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அவர் செல்லும் இடங்களில் ஆய்வு செய்ய உரிமை உள்ளது.

தமிழக அரசின் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள ஆளுநர் விரும்பவில்லை.

அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே சட்டப்பேரவையில் வாசித்தது இதே ஆளுநர் தான்.

இந்த அரசுக்கு ஆளுநர் முழு ஒத்துழைப்பு தரும் போது, அவரை கொச்சைப் படுத்துவது அமைச்சருக்கு அழகல்ல.

அரசு வழக்கறிஞரை நியமிக்க ரூ.5 முதல் 25 லட்சம் வரை அமைச்சர் நிர்மல் குமார் லஞ்சம் கேட்பதாக புகார் வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *