சென்னை:
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின் ‘தர்மன்’ படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.
இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மிகவும் அதிகளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் நடிக்கிறார்.
ரஜினிகாந்துடன் இணைந்து சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னையில் பிரம்மாண்ட பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதனிடையே, ‘தர்மன்’ பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,
‘தலைவர்’ (ரஜினி) அவர்களின் படப்பிடிப்பின் முதல் நாளில், அவர் காரிலிருந்து இறங்கி மருத்துவமனைக்குள் நுழையும் ஒரு காட்சியைப் படமாக்கினோம்.
மானிட்டரில் அதைப் பார்த்தபோது, அவரது கம்பீரமான பாணியும், நடையும் என்னைக் பிரமிக்க வைத்தன.
படப்பிடிப்பு தளத்திலேயே அந்தத் தருணத்தை ரசித்து, என்னையறி யாமலே விசில் அடிக்கும் அளவுக்கு உற்சாகமடைந்தேன்.
விருந்தாக அமையும்
‘தர்மன்’ எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பு. அதைப் பற்றி நினைத்தாலே என் கால்கள் நடுங்குகின்றன. அதனால், மகிழ்ச்சியான மற்றும் நிதானமான மனநிலையுடன் இதை அணுக முடிவு செய்தேன். இதை ரஜினி சார் அவர்களிடமும் கூறினேன்.
அவருடன் பணியாற்றுவது மிகவும் வசதியாக இருக்கிறது. ‘தர்மன்’ ஒரு ஸ்டைலான, நேர்த்தியாக உருவாக்கப்பட்ட திரைப்படமாக இருக்கும்.
ரஜினிகாந்த் சாரது கம்பீரமான பாணியும் எனது படமாக்கும் முறையும் இணையும்போது, இது ஒரு மாபெரும் விருந்தாக அமையும் என்றார்.