தமிழக மக்களை பாதிக்கும் மின் கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும்!! உடனடியாகச் சீரமைக்காவிட்டால், பாஜக சார்பில் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை….

சென்னை:
“தமிழக மக்களை பாதிக்கும் மின் கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும்.

இந்தப் பிரச்சினைகளை உடனடியாகச் சீரமைக்காவிட்டால், பாஜக சார்பில் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மக்களுக்கு நேர்மையான மற்றும் துல்லியமான சேவைகளை வழங்க வேண்டிய தவெக அரசின் மின்சார வாரியம், தனது பொறுப்பில் இருந்து தவறியதன் காரணமாக, மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் குளறுபடிகளால் மக்களுக்குத் தவறான கட்டணங்களை அனுப்பியுள்ளது.

இத்தகைய தவறான பில்லிங் முறைகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

மின் கணக்கீட்டில் பெரும் குளறுபடிகள் நடந்திருப்பதாக மின்வாரியத் தலைமைப் பொறியாளரே ஒப்புக்கொண்டிருப்பது முதல்வர் விஜய் அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது.

எனவே கணக்கீட்டுப் பிழைகளால் மக்கள் மீது இமாலயக் கட்டணம் சுமத்தப்பட்டுள்ள இந்தப் பிரச்சினையில், முதல்வர் தனிக் கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேலும், தவறாக வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை மின்வாரியம் உடனடியாகத் திருப்பித் தருவதோடு, மின் கட்டணக் குளறுபடிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணச் சிறப்புத் தணிக்கையை தவெக அரசு தொடங்க வேண்டும்.

மின்வாரியத்தின் இந்தப் பிரச்சினைகளை உடனடியாகச் சீரமைத்து மக்களின் சுமையைக் குறைக்கத் தவறினால், பாஜக சார்பில் ஒட்டுமொத்த மக்களைத் திரட்டிப் பெரும் போராட்டங்கள் முன் னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *