சென்னை:
பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை குறித்து அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில், “காலம் பொன் போன்றது என எனக்கு தெரியும். ஆபத்து காலங்களில் மக்கள் 108-ஐ அழைப்பது போல் தமிழக மக்கள் தங்கள் அச்சத்தை போக்க எங்களுக்கு 108 எம்எல்ஏக்களை பரிசாக வழங்கியுள்ளார்கள்.
பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம் மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி வழங்குவதற்கு 11 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மாதந்தோறும் விடுதியில் ஆய்வு நடைபெறுகிறது. மாணவர் விடுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுதிகளில் காலி பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதியும் செய்து கொடுக்க முதல்வர் அறிவுறுத்தினார். விடுதிகளின் தூய்மை, அடிப்படை வசதிகள், உணவின் தரம் ஆகியவை கண்காணிக்கப்படுகிறது.
மாணவர்களின் மீது அக்கறையுடன் இந்த அரசு செயல்படுகிறது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.