தவெக கட்சித் தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி அறிவித்துள்ளதற்கு புதிய தமிழகம் கட்சி வரவேற்பு !!

தவெக கட்சித் தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி அறிவித்துள்ளதற்கு புதிய தமிழகம் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வலுவான கொள்கை; கோட்பாடுகள்;அவற்றை அடைவதற்கான போராட்டங்கள்; முன் அனுபவங்கள் ஏதுமின்றி திரையுலகம், விளையாட்டு எனப் பிற துறைகளில் பெறக்கூடிய புகழ், விளம்பரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு அண்மைக்காலமாக பலரும் அரசியலுக்குள் நுழைகிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தமட்டிலும் திரை உலக புகழே பலரையும் ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்துள்ளது. கொள்கை கோட்பாடுகளை முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் நடைமுறையில் பெரும் தோல்வியுற்று விட்டனர்.

மேலும், அவர்களே தமிழ்ச் சமூகத்தின் பிரதான எதிரிகளாக பரிணமித்துவிட்ட நிலையில் விரும்பியும் விரும்பாமலும் புதிய சூழல்களை ஏற்றுக் கொள்ளும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அண்மையில் துவங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை தம்பி விஜய் இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.! அவருக்குப் பாராட்டுக்கள்.!

தமிழ்நாட்டில் கடந்த 75 வருடத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனும் கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசவும் இல்லை; அதற்கான பல சூழல்கள் ஏற்பட்ட பொழுதும் ஆட்சியில் எந்த கட்சிக்கும் பங்கு அளிக்கவுமில்லை. ஆனால், தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன் வைத்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சி துவங்கப்பெற்ற நாள் முதல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மட்டும் சொல்லாமல், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கும் கூட்டணி ஆட்சி முறையே தமிழகத்தில் நிலவும் அனைத்து அவலங்களுக்கும் தீர்வு என்பதை வலியுறுத்தி வருகிறது.

2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அளவு மாற்றத்தையும், குண மாற்றத்தையும் நிகழ்த்தும்.! அதுவே தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும்.!” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *