திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினால், திருவாலங்காடு அருகே இரு தரைப்பாலங்கள் உடைந்தன.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதிகள் வழியாக கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் ஃபெஞ்சல் புயல் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ்வாறு பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினால், திருவாலங்காடு அருகே எல்.வி.புரம், குப்பன் கண்டிகை பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள இரு தரைப்பாலங்கள் நேற்று இரவு உடைந்தன.
ஆகவே, எல்.வி.புரம், குப்பன் கண்டிகை சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், எல்.வி.புரம், குப்பன் கண்டிகை தரைப்பாலங்கள் அருகே போலீஸார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல வேண்டிய திருவாலங்காடு, பழையனூர், மணவூர், பெரியகளக்காட்டூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஆகவே, இப்பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்ற 50 ஆண்டு கால கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.