கன்னட சின்னத்திரை நடிகையான ஷோபிதா பிரம்மகந்து மற்றும் நினிடேல் ஆகிய வெற்றித் தொடர்களில் நடித்ததின் மூலம் அறியப்பட்ட கன்னட தொலைக்காட்சி நடிகை ஷோபிதாவிற்கு கடந்த ஆண்டு, தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுதீருடன் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி கொடுத்திருந்த ஷோபிதா ஐதாராபாத் கச்சிபௌலி ஸ்ரீராம்நகர் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவரது வீட்டில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து கச்சிபவுலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷோபிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் காரணங்கள் தெளிவாக இல்லாத நிலையில், அவரது மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது. ஆகவே அதற்கான கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடமிருந்து போலீசார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஷோபிதாவின் உடல் அவரது குடும்பத்தினர் வசிக்கும் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.