சென்னை:
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உயர் கல்வியை போதிக்கும் உன்னதமானப் பணியினை கடந்த இருபது ஆண்டு காலமாக கௌரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், அவர்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப்படுகிறதா என்றால் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் என மொத்தம் 171 அரசு கல்லூரிகளில் 7,300-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம் ஆகியவற்றை பெற்று தங்கள் பணி என்றாவது ஒரு நாள் நிரந்தரம் செய்யப்படும் என்ற எண்ணத்தில் மாதம் 25,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. அதாவது, ஓர் ஆண்டிற்கு 11 மாத சம்பளம் மட்டுமே பெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 45 வயதைக் கடந்தவர்கள்.
மேற்படி கௌரவ விரிவுரையாளர்களுக்கு 57,500 ரூபாய் மாத ஊதியம் தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டிருந்தது. இந்த ஊதியத்தினைத் தர சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. இருந்தாலும் இதுநாள் வரை இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
அதே சமயத்தில், கல்விப் பணியை தவிர நிர்வாகப் பணிகளும் கௌரவ விரிவுரையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. கூடுதல் ஊதியம் தருவதற்குப் பதிலாக கூடுதல் பணியை அளித்து வரும் அரசாக தி.மு.க. அரசு விளங்குகிறது.
இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பினை செயல்படுத்த வேண்டும், தங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் கடந்த ஒரு வார காலமாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களை அழைத்துப் பேசாமல், அந்தந்தக் கல்லூரி முதல்வர்கள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களுக்கு அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இது ஜனநாயகத்திற்கு விரோதமானச் செயல். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, அவர்களுடைய கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கெளரவ விரிவுரை யாளர்களை அழைத்துப் பேசி, பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த ஊதியத்தை சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புப்படி நடைமுறைப் படுத்தவும், படிப்படியாக அவர்களை நிரந்தரம் செய்யவும், போராட்டக் காலத்தை பணிக் காலமாக கருதி அவர்களுக்குரிய ஊதியத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.