கூடலூர்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் நடை திறக்கப்பட்டு மண்டல, மகர விளக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வழிபாட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொள்கின்றனர்.
இது தவிர ஒவ்வொரு மாத பிறப்பன்றும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தற்போது பங்குனி உத்திர ஆராட்டு விழா நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 1-ந் தேதி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஐயப்ப சுவாமி உருவம் பொறித்த தங்க டாலர்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 1, 2, 4, 6, 8 கிராம்களில் டாலர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மலையாள ஆண்டு பிறப்பான விஷூ பண்டிகை தினமான ஏப்ரல் 14-ந் தேதி முதல் இந்த டாலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இது குறித்து தேவசம்போர்டு தலைவர் கூறுகையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அய்யப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் இச்சேவை நிறுத்தப்பட்டது. தற்போது இதனை தொடர வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டதன் பெயரில் 1, 2, 4, 6, 8 கிராம் என 5 வகையான டாலர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. முன்னணி தங்க நகை நிறுவனங்கள் இவற்றை வடிவமைத்து தந்துள்ளன.
இதன் தரம் உறுதி செய்யப்பட்டு 916 தர முத்திரையுடன் விற்பனை செய்யப்பட உள்ளது. சித்திரை விஷூ தினமாக வருகிற 14-ந் தேதி சபரிமலையில் இந்த டாலர்கள் விற்பனை தொடங்க உள்ளது. ஆன்லைன் மற்றும் தேவசம்போர்டு அலுவலகத்தில் பணம் செலுத்தி இவற்றை வாங்கி கொள்ளலாம்.
சன்னிதானத்தில் பூஜை செய்த பிறகு இந்த டாலர்கள் விற்பனைக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார். 12 ஆண்டுகளுக்கு முன்பு அய்யப்ப சுவாமி உருவம் பொறித்த டாலர் ரூ.500க்கு விற்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு கிராம் எடைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.
தற்போது கேரளாவில் குருவாயூர் கோவிலில் மட்டுமே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சபரிமலையில் மீண்டும் தங்க டாலர் விற்பனை அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் புனித நீராடலுக்காக உற்சவ மூர்த்தி இன்று பம்பை வருகை தருகிறார். எனவே சன்னிதானத்தில் காலை 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மீண்டும் இரவு 8 மணிக்கு சன்னிதானத்தில் தரிசனம் தொடங்கும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.