முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திர சேகர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சந்திர சேகர் உயிரிழந்தார். சந்திர சேகர் மரணம் அடைந்ததை அறிந்ததும் அதிமுக நிர்வாகிகள் கோகுல இந்திராவின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான S. கோகுல இந்திரா அவர்களுடைய கணவர் A.R. சந்திரசேகர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
பாசமிகு கணவரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரி கோகுல இந்திராவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்.
இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், சந்திரசேகருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.