ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த பயங்கர தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அந்த வகையில், இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை இந்தியா மூடியது.
பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. பாகிஸ்தானுடன் அனைத்து வகையான தபால் மற்றும் பார்சல் சேவையை நிறுத்தி உள்ளது.
இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
ஜம்முவின் கரோட்டா பகுதியை சேர்ந்தவர் முனிர் அகமது. இவர் சி.ஆர்.பி.எப். படையில் (மத்திய ரிசர்வ் காவல் படை) வீரராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த மேனல் கான் என்ற பெண்ணுக்கும் ஆன்லைன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் கடந்த ஆண்டு் வீடியோ கால் அழைப்பு மூலம் திருமணம் செய்து கொண்டனர்.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் சுற்றுலா விசாவில் அவர் இந்தியாவுக்கு வந்தார். அவரது விசா மார்ச் 22-ந் தேதியோடு முடிவடைந்த நிலையில், அவர் தொடர்ந்து இந்தியாவில் தங்கி இருந்தார்.
இதனிடையே, பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானை சேர்ந்தவர்களை வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டதால், அட்டாரி- வாகா எல்லை வழியாக மேனல் கான் பாகிஸ்தானுக்கு நாடு கடத்த திட்டமிடப்பட்டது.
இருப்பினும், அவரது நாடு கடத்தலுக்கு ஐகோர்ட்டு தடை விதித்தது.
அவர் தற்போது முனிர் அகமதுவின் வீட்டில் தங்கி உள்ளார். இதற்கிடையே பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை மறைத்தது மற்றும் விசா காலம் முடிந்தும் அவரை இந்தியாவில் தங்க வைக்க உதவி செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக முனிர் அகமது தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் முனிர் அகமதுவின் செயல்பாடு இருப்பதாக மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அனுமதி பெற்றே பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “முதலில் ஊடக அறிக்கைகள் மூலம் எனது பணிநீக்கம் குறித்து எனக்கு தெரியவந்தது. பணிநீக்கம் குறித்து மத்திய ரிசர்வ் காவல் படையிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.
அது எனக்கும், என் குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் நான் மத்திய ரிசர்வ் காவல் படை தலைமையகத்தில் பாகிஸ்தானிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற்றுள்ளேன்.
நான் எனது பிரமாண பத்திரம் மற்றும் எனது பெற்றோர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினரின் பிரமாண பத்திரங்களை முறையான வழிகளில் சமர்ப்பித்து கடந்த ஆண்டு மத்திய ரிசர்வ் காவல் படை தலைமையகத்தில் திருமணத்துக்கு அனுமதி பெற்றேன்.
ஆட்சேபனையில்லா சான்றிதழுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் அது கிடைக்கவில்லை. விதிகளின்படி வெளிநாட்டவருடனான எனது திருமணம் குறித்து அரசுக்கு தெரிவித்து ஏற்கனவே சம்பிரதாயங்களை முடித்து விட்டேன்.
நான் பணியமர்த்தப்பட்ட எனது 72-வது பட்டாலியனுக்கு திருமண படங்கள், திருமண ஆவணங்கள் மற்றும் திருமண சான்றிதழை சமர்ப்பித்தேன்.
எனது மனைவிக்கு கடந்த மார்ச் மாதத்திலேயே நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பித்தோம். நேர்காணல் உள்ளிட்ட தேவையான சம்பிரதாயங்களை நாங்கள் முடித்துள்ளோம்.
எனது மனைவியின் நாடு கடத்தலுக்கு லடாக் ஐகோர்ட்டு நிவாரணம் வழங்கியது. எனது பணிநீக்கத்தை எதிர்த்து சட்ட நடவடிக்கையாக கோர்ட்டை நாடப்போகிறேன்” என்று அவர் கூறினார்.