இந்தியாவில் தமிழகம் முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும் இன்னும் ஒருசில மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளன – ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!!

சென்னை:
தமிழகத்தில் ஒருசில மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன என்றும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்கள் சில மாவட்டங்களில் உள்ளனர் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தெலங்கானா மாநிலம் உருவான நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு மொழிவாரியாக 16 மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நிர்வாக வசதிக்காக மேலும் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

அந்த வகையில், கடந்த 11 ஆண்டுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் பெரும்பான்மை மொழி பேசுவோர், பிற மொழி பேசுவோர் என்ற அரசியல் பிரிவினை உருவானது.

கடந்த 2014-க்கு முன்பு இந்தியாவில் ஜாதி மற்றும் பிரிவினை அரசியல் நடத்தப்பட்டது. ஆனால், 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமர் ஆன பின்பு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற நோக்குடன் அனைத்து மக்களுக்கும் வளர்ச்சி என்ற அடிப்படையில் அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் வறுமை மிகுந்த 120 மாவட்டங்கள் கண்டறியப்பட்டன. அவற்றுக்கான மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட காரணத்தினால் அம்மாவட்டங்கள் தற்போது வளர்ச்சி அடைந்துள்ளன.

ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னர் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தது. ஆனால் அவர்களின் வருகைக்கு பின்னர் வளர்ச்சி குறைய தொடங்கியது. இப்போது மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.

2014-க்கு முன்பு பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

வெகுவிரைவில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும். இந்தியாவில் தமிழகம் முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும் இன்னும் ஒருசில மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளன. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மாணவர்கள் சில மாவட்டங்களில் உள்ளனர். இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *