சென்னை,
தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எதற்காக, எப்படி, ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்த முழு விவரங்களை அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் செய்தியாளர் சந்திப்பின்போது விளக்கினார்.
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு அதிகாரியாக செயல்பட்டுவரும் அமுதா பேசியதாவது:-
- அரசின் செயல்பாடுகள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும் என முதல்-அமைச்சர் விரும்புகிறார்
- `உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்-அமைச்சர் சிதம்பரத்தில் நாளை தொடங்கி வைக்கிறார்.
- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வரும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காண வேண்டும் என முதல்-அமைச்சர் வலியுறுத்தி உள்ளார். இதனை அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம்.
- உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். தகுதியானவர்கள் விடுபட்டு இருந்தால் விண்ணப்பங்களை பெற்று நிரப்பி கொடுக்க, உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு திட்டத்தில் இணைக்கப்படுவர்.
- மக்கள் அதிகமாக கூடுகிற, வசிக்கிற இடங்களில் முகாம்கள் நடத்த உள்ளோம்.
- மக்களுக்கு நாம் முகாம் நடத்துவது தெரியப்படுத்த, முகாம் நடத்துவதற்கு முன்பாக தன்னார்வலர்களை அனுப்பி சிறப்புத் திட்ட முகாம் நடத்த உள்ளோம். இதற்காக ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நவம்பர் வரை 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
- முன்பு 20,000 மக்கள் தொகைக்கு ஒரு முகாம் இருந்தது. இப்போது 10,000 மக்கள் தொகைக்கு ஒரு முகாம் அமைக்கப்பட உள்ளது.
- முகாம்கள் நடக்கும் ஒரு வாரத்துக்கு முன்பு வீடு, வீடாகச் சென்று மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். வாரத்தில் நான்கு நாள்கள் முகாம் நடைபெறும். இது நவம்பர் மாதம் வரை நடைபெறவிருக்கிறது.
- மக்களின் குறைகளை கேட்டறிய, 1100 என்ற எண்ணுடன் 100 பேர் கொண்ட உதவி மையம் செல்பட்டு வருகிறது.
- அரசின் சேவைகளைப் பெற மக்கள் சிரமப்படுவதை அறிந்து மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் மக்களிடையே விரைவாகச் செல்ல வேண்டும் என்று தமிழக முதல் -அமைச்சர் நினைக்கிறார்.
- மக்களின் புகார் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது.
- முதலமைச்சரின் முகவரி துறை மூலம் 1.5 கோடி மனுக்கள் பெறப்பட்டன. கடந்த 30ம் தேதி வரை 1 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2344 ஊரக முகாம்கள் மூலம் 95 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.