டாக்கா:
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டியின் முடிவில் வங்கதேச அணி 2 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி டாக்காவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்களை எடுத்தது.
தொடக்க வீரர் சாஹிப்சாதா பர்ஹான் அதிரடியாக விளையாடி அரை சதத்தைப் பதிவுசெய்தார். அவர் 63 ரன்னில் அவுட்டானார். ஹசன் நவாஸ் 33 ரன்னில் வெளியேறினார்.
வங்கதேச அணி சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது.
பாகிஸ்தான் அணியினரின் துல்லிய பந்து வீச்சில் சிக்கிய வங்கதேச அணி 104 ரன்னில் சுருண்டு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 74 ரன்னில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது. வங்கதேசம் அணி டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது சாஹிப்சாதா பர்ஹானுக்கும், தொடர் நாயகன் விருது ஜேகர் அலிக்கும் வழங்கப்பட்டது.
ஏற்கனவே இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்ற வங்கதேச அணி, தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவும் டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது.