சென்னை:
‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான தலைவன் தலைவி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 34 மணி நேரத்தில் 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி படத்திற்கு இந்த அளவு டிக்கெட் முன்பதிவுகள் நடப்பது இதுவே முதல்முறையாகும். இப்படம் மிகப்பெரிய ஓபனிங் கொடுத்துள்ளது.
கணவன் மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் கிடைத்துள்ளது. திரைப்படம் தமிழ் நாட்டு அளவில் 4.5 கோடி ரூபாயும் உலகளவில் 8 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் வரும் நாட்களில் கூடுதலாக வசூல் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.