புதுடெல்லி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது. ஆசிய கோப்பைக்கான (டி20) இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடருகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தருக்கு இடம் இல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், ஆசிய போட்டிக்கான இந்திய அணி குறித்து முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசியதாவது:
இந்த இந்திய அணியை கொண்டு ஆசிய கோப்பையை வேண்டுமென்றால் வெல்லலாம். ஆனால் இந்த வீரர்களைக் கொண்டு டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை.
இந்த அணியை உலகக் கோப்பைக்கு எடுத்துச்செல்ல போகிறீர்களா? 6 மாதத்தில் தொடங்கும் உலகக் கோப்பைக்கான தயாரிப்பு பணிகள் இதுதானா?. இது இந்திய அணியை பின்நோக்கி எடுத்துச் செல்கிறது. துணை கேப்டன் பதவியில் இருந்து அக்ஷர் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார்.
ரிங்கு சிங், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா எப்படி அணியில் இடம் பிடித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஐ.பி.எல். தொடரே அணி தேர்வுக்கான முக்கியமானது. ஆனால் தேர்வாளர்கள் அதற்கு முன்பு வீரர்கள் செயல்பட்டதை கருத்தில் கொண்டதாக தெரிகிறது என தெரிவித்தார்.
10-வது டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.