விஜயதசமி என்பது வெற்றியை குறிக்கும் பண்டிகையாகும். நவராத்திரி விழா முடிந்த 10-வது நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
இந்த விஜயதசமி கொண்டாடுவதற்கு பலவிதமான புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இருப்பினும் பெரும்பாலானோர், பராசக்தி மகிஷாசுரனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே, ‘விஜயதசமி’ என்று கொண்டாடி மகிழ்கிறார்கள்.
‘விஜய்’ என்றால் வெற்றி என்றும், ‘தசம்’ என்றால் பத்து என்றும் பொருள். அன்னை, மகிஷாசுரனுடன் 9 நாள் போரிட்டு, 10-வது நாள் பெற்ற வெற்றியே விஜயதசமி ஆகும்.
முன்பொரு காலத்தில் தனு என்ற அசுரன் இருந்தான். அவனுக்கு மிகவும் பலசாலியான ரம்பன், கரம்பன் என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும், தங்களுக்கு மிக சக்தி வாய்ந்த புத்திரர்கள் வேண்டும் என்பதற்காக கடும் தவம் புரிந்தனர்.
கரம்பன் என்பவன் அன்ன ஆகாரம் இன்றி நீரில் நின்று தவம் செய்தான். அப்பொழுது இந்திரன், இவனுக்கு பிள்ளை பிறந்தால் தேவர்களுக்கு ஆபத்து என்று கருதி, முதலை உருவில் சென்று நீரில் நின்றிருந்த கரம்பனை கொன்றான்.
ரம்பன் என்பவன் யட்சபுரி என்ற ஊரில் ரசாலம் என்ற ஆலமரத்தின் அடியில் பஞ்சாங்கனி மத்தியில் தவம் செய்தான். சகோதரனாகிய கரம்பனுக்கு இந்திரனால் ஏற்பட்ட மரணத்தை அறிந்து, தேவர்களை அழிக்க சபதம் மேற்கொண்டான்.
தவத்தின் இறுதியில் தன் தலையை வெட்டி அக்னியில் செலுத்த முயன்றான்.
அவனின் தவத்தில் மகிழ்ந்த அக்னி தேவன், அவன் முன் தோன்றி, ‘உனக்கு என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டார்.
உடனே ரம்பன், ‘எனக்கு யாராலும் ஜெயிக்க முடியாத மகன் வேண்டும்’ என்றான். அதற்கு அக்னி தேவன், “நீ எந்தப் பெண்ணை முதலில் பார்க்கிறாயோ, அந்த பெண்ணிடம் உனக்கு புத்திரன் பிறப்பான்” என்று வரம் கொடுத்தார்.
இதையடுத்து ரம்பன் தவத்தில் இருந்து வெளியே வந்தான். அப்போது அவன் எருமை ஒன்றை கண்டான். அந்த எருமையைப் பார்த்த உடன், அதன் வாயிலாக அவனுக்கு ஒரு குழந்தைப் பிறந்தது.
எருமைத் தலையும், மனித உடலுமாக பிறந்த அந்தப் பிள்ளை ‘மகிஷாசுரன்’ என்று அழைக்கப்பட்டான். (இது மகிஷாசுரன் பிறப்பு பற்றி புராணங்கள் கூறும் பல கதைகளில் ஒன்று).
மகிஷாசுரன், மகாமேரு என்ற மலையில் பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான். மரணம் இல்லாத வாழ்க்கையை அவன் பிரம்மாவிடம் கேட்டான். அதற்கு பிரம்மன், “மரணம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது. பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு என்பது நிச்சயம். அதனால் வேறு வரம் கேள்” என்றார்.
அதற்கு அவன், “தேவர்களாலும், பூதங்களாலும், ஆண்களாலும், மிருகங்களாலும், எனக்கு மரணம் ஏற்படக்கூடாது” என்றான்.
பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால், பெண்களை தவிர்த்து வரம் கேட்டான். பிரம்மதேவனும் அவன் கேட்ட வரத்தை அளித்தார்.
மகிஷாசுரனுக்கு, சிட்சூரன் என்பவன் சேனாதிபதியாகவும், தாம்ரன் என்பவன் தனாதிபதியாகவும் இருந்தனர். அஸிலோமா, பிடாலன், பாஷ்களன், கால பந்தகன், உதர்க்கன், திரிநேத்ரன் போன்ற மந்திரிகளும் இருந்தனர்.
அவனுக்கு பயந்த ரிஷிகளும், முனிவர்களும் அவன் சொல்படி கேட்டு நடந்தனர். அவன் அஞ்சனம் என்ற மலையில் மாஹிஷம் என்ற மிக அழகிய பட்டினத்தை நிர்மாணித்தான். தேவர்களை மிரட்டி, தனக்கு உதவியாளர்களாக மாற்றிக் கொண்டான்.
மும்மூர்த்திகளும், தேவர்களும் ஒன்று கூடி, மகிஷனை எப்படி அழிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். தேவர்களின் சக்தியிலும், மும்மூர்த்திகளின் ஒளியிலும் இருந்து தெய்வீக சக்தி படைத்த தேவி தோன்றினாள்.
புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் பராசக்தி தேவர்களுக்கு காட்சி கொடுத்தாள்.
இந்த தேவி 18 கைகள் கொண்டு அஷ்டாதச மகாலட்சுமியாக காட்சி தந்தாள்.
தொடர்ந்து ஒன்பது இரவுகள் போர் புரிந்து, மகிஷாசுரனையும் அவனுடன் இருந்த அசுரர்களையும் அழித்தாள். இதனால் அந்த அன்னை, ‘மகிஷாசுர மர்த்தினி’ என்று அழைக்கப்பட்டாள்.
எந்த இடத்தில் மகிஷனை, தேவி வதம் செய்தாளோ அந்த இடம் ‘தேவிப்பட்டினம்’ என்று பெயர் பெற்றது. அன்னை போரிட்ட ஒன்பது நாட்களும் நவராத்திரியாகவும், வெற்றி பெற்ற 10-ம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.