சென்னை:
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் முக்கியமான செய்தியாக மாறியது.
இந்நிலையில் கரூருக்கு நேரில் செல்ல விஜய் திட்டமிட்டிருக்கிறார். அதேசமயம் கடந்த முறையை போல அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு தவெக தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில், 5 முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
1) திருச்சி ஏர்போர்ட் முதல் கரூர் வரை, மீண்டும் ஏர்போர்ட் திரும்பும் வரை
மொபைல் பேட்ரோல் வசதி வேண்டும். ஆங்காங்கு போலீஸ் செக் பாயிண்ட்கள் அமைக்க வேண்டும். தங்களது வழியில் அனுமதிக்கப்படாத வாகனங்கள் எதுவும் வரக்கூடாது.
விஜய் கான்வாயை யாரும் பின் தொடரவோ, அருகில் வரவோ கூடாது. தங்கள் வாகனம் நெருக்கடியில் சிக்காமல் தொடர்ந்து பயணிக்கும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய வேண்டும். பொதுமக்களும் அருகில் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.
2) திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு
விமான நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேவையின்றி யாரும் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். கூட்டம் கூடாமல் தடுக்க வேண்டும்.
விமானத்தில் இருந்து தனது கான்வாய் வரை எளிதாக செல்லும் வகையில் விமான நிலைய அதிகாரிகள் உடன் இணைந்து போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
3) கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு சென்று விஜய் பார்வையிடும் போது, ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தவெக தலைவருக்கான ஒய் பிரிவு பாதுகாப்பு, இதர பாதுகாப்பு வீரர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
சிறிதளவும் கூட்டம் கூடாத வகையில் நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் செல்லும் போது ஒருவழிப் பாதை மட்டும் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதில் கலந்து கொள்வோர் அனைவரும் போலீசார் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்க வேண்டும். இந்த சந்திப்பில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். அதன் அடிப்படையில் சோதனைகள் செய்யப்பட வேண்டும்.
4) மீடியா கட்டுப்பாடுகள்
விஜய் வருகை புரியும் இடத்தில் மீடியாவிற்கு அனுமதி அளிக்கக் கூடாது.
5) பயணத்திட்டம் மற்றும் ஒத்துழைப்பு
தவெக தலைவரின் பயணத்திட்டத்தின் படி, திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்குகிறார். அங்கிருந்து கரூருக்கு புறப்பட்டு செல்கிறார். கரூரில் தனியாக சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். மீண்டும் விமான நிலையம் வந்து, அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்வார்.
கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் உடன் ஆலோசனை நடத்திய பின்னர், விஜய் செல்லும் தேதி, நேரம், இடம், கால அவகாசம் ஆகியவை குறித்த விரிவான விவரங்கள் தங்களிடம் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று ஒரு பிரபலத்திற்கு இவ்வளவு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.