ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் டக் அவுட் ஆன விராட் கோலி 2 ஆவது போட்டியிலும் டக் அவுட் ஆனதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி ரன்களை குவிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில், விராட் கோலி முதலில் ரன்கள் ஓடி ஸ்கோர் போர்டில் கணக்கை தொடங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலியின் ஃபார்ம் முக்கியமானது.
அவர் முதலில் ரன்கள் ஓடி ஸ்கோர் போர்டில் கணக்கை தொடங்க வேண்டும் . ஏனென்றால் அவர் அதை செய்துவிட்டால் போதும், அவரை தடுத்து நிறுத்த முடியாமல் எதிரணி திணறும்” என்று தெரிவித்தார்.