திருப்பதி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். மேலும், இந்தாண்டு இறுதியில் மலேசியாவிலும், அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.
இதற்கிடையே, அஜித் குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தப் படம் ஜனரஞ்சகமான கமர்ஷியல் படமாக அமையும் என ஆதிக் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். புதிய படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே, அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். மேலாடை அணியாத நிலையில் அஜித் தனது மார்பின் வலது பக்கத்தில் பச்சைக் குத்திக் கொண்டு இருந்தது இணையத்தில் கவனம் பெற்றது. அந்த டாட்டூ அஜித்தின் குலதெய்வமான பகவதியம்மன் என கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை நடைபெற்ற சுப்ரபாத சேவையின் போது வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவரைக் கண்ட ரசிர்கள் தல, தல என்று கூச்சலிட்டனர். அப்போது கோவிலில் அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார்.
மேலும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.