ஈரோடு
ஈரோடு மாவட்டத்தின் புகழ் பெற்ற சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்புகழ் அருளிய ஸ்ரீ அருணகிரிநாதர் மற்றும் கந்த சஷ்டி கவசம் அருளிய ஸ்ரீ பால தேவராயர் சுவாமிகள் ஆகிய இருவருக்கும் தனித்தனி சன்னதி அமைக்க முருக பக்தர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியபோது, சென்னிமலை மலைக் கோவிலில் ஸ்ரீ அருணகிரிநாதர் மற்றும் ஸ்ரீ பால தேவராயர் சுவாமிகள் ஆகிய அருளாளர்களுக்கு தனித்தனி சன்னதி கட்டும் பணி ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார். கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை அருளார்கள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி யாக சாலை பூஜைகள் காலை 6 மணிக்கு தொடங்கியது, 7 மணிக்கு கலச புறப்பாடு அதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.