டூனிடின்:
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 3-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
டூனிடின் நகரில் நேற்று நடைபெற்ற 5-வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 18.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 38, ரோமாரியோ ஷெப்பர்டு 36 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் ஜேக்கப் ஃடபி 4, ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
141 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. டிம் ராபின்சன் 24 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 16 பந்தில் 21 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். டேவன் கான்வே 47 ரன்களும், மார்க் சாப்மேன் 21 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.