கொல்கத்தா:
ஐசிசி தொடர்களில் அடுத்தடுத்து இரண்டு இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து தோல்வியடைந்தது வேதனை அளிப்பதாக அந்த அணியின் வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரச்சின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அணியின் ஆடும் லெவனில் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மூன்று விதமான பார்மெட்டிலும் விளையாடி வரும் அவர் கூறியதாவது:
“அடுத்தடுத்து இரண்டு ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. அதிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் நாங்கள் வெற்றியை நெருங்கி வந்தோம். அது எப்போதும் வேதனை தரும் என நினைக்கிறேன்.
அந்த இரண்டு ஆட்டமும் ஏமாற்றம் தந்தது. இருப்பினும் இது கிரிக்கெட் விளையாட்டு. இதில் வெற்றியாளர் ஒருவர்தான். இந்தியா மிகச்சிறந்த மற்றும் தரமான வீரர்கள் நிறைந்த அணி. துபாய் மற்றும் இந்தியாவில் அதிகம் விளையாடிய அணி என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பவுலிங் சார்ந்து தொடர்ந்து கற்பதும், அழுத்தம் மிகுந்த தருணத்தில் தெளிவும், முடிவு எடுப்பதும்தான் முக்கியம். நியூஸிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், சான்ட்னர் ஆகியோரிடமிருந்து அதை நான் கற்றுக் கொண்டேன்.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நான் சிலவற்றை கற்றுக் கொண்டேன். அதோடுதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைத்துள்ளேன்” என்றார்.
கடந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை இந்திய அணி 4 விக்கெட்டுகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த மாதம் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் 96 ரன்களில் இந்தியா நியூஸிலாந்தை வீழ்த்தியது.