சென்னை:
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரத்துக்கு டிச. 2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தொலைதூரப் பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகள் டிச. 2, 3 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளன.
மேலும், திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமியை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 160 அதிநவீன குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் டிச. 3,4 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளன.
இணையதளம், செயலி: இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in இணையதளம் மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி ஆகியவற்றின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை 9445014426, திருநெல்வேலி 9445014428, நாகர்கோவில் 9445014432, தூத்துக்குடி 9445014430, கோவை 9445014435, சென்னை தலைமையகம் 9445014463 மற்றும் 9445014424 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.