ராஞ்சி:
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஞ்சியில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி தொடக்கம் கொடுக்க முயற்சித்தார்.
16 பந்துகளை சந்தித்த அவர், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் நந்த்ரே பர்கர் பந்தில் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்கிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி, வழக்கத்துக்கு மாறாக அதிரடியாக விளையாடினார்.
மறுமுனையில் நிதானமாக விளையாடி தனது 60-வது அரை சதத்தை கடந்த ரோஹித் சர்மா 51 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசிய நிலையில் மார்கோ யான்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
அப்போது ஸ்கோர் 21.2 ஓவர்களில் 161 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா – விராட் கோலி ஜோடி 109 பந்துகளில் 136 ரன்கள் சேர்த்தது.
இதன் பின்னர் இந்திய அணியின் ரன் குவிப்பில் சற்று தேக்கம் ஏற்பட்டது. ருதுராஜ் கெய்க்ட்வாட் 8, வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களில் நடையை கட்டினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் நிதானமாக பேட் செய்ய மறுமுனையில் விராட் கோலி, தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.
அதிரடியாக விளையாடிய விராட் கோலி 102 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரி களுடன் தனது 52-வது சதத்தை விளாசினார்.
சிறப்பாக விளையாடி வந்த அவர், 120 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 135 ரன்கள் குவித்த நிலையில் நந்த்ரே பர்கர் வீசிய பந்தில் கவர் திசையில் நின்ற ரியான் ரிக்கெல்டனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு விராட் கோலி – கே.எல்.ராகுல் ஜோடி 76 ரன்கள் சேர்த்தது. சீராக ரன்கள் சேர்த்த கே.எல். ராகுல் 19-வது அரை சதத்தை கடந்த நிலையில் 56 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் பார்ட்மேன் பந்தில் கார்பின் போஷிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இறுதிகட்டத்தில் மட்டையை சுழற்றிய ரவீந்திர ஜடேஜா 20 பந்துகளில், 32 ரன்களும் அர்ஷ்தீப் சிங் ரன் ஏதும் எடுக்காமலும் கார்பின் போஷ் பந்தில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ யான்சன், நந்த்ரே பர்கர், கார்பின் போஷ், ஒட்னில் பார்ட்மேன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து 350 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஹர்ஷித் ராணா வீசிய 2-வது ஓவரில் ரியான் ரிக்கெல்டன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் போல்டானார்.
அடுத்த சில பந்துகளில் குயிண்டன் டி காக் (0) கே.எல்.ராகுலிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார்.
எய்டன் மார்க்ரம் 7 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்தில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
11 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் மேத்யூ ப்ரீட்ஸ்கே, டோனி டி ஸோர்ஸி ஜோடி சீராக ரன்கள் சேர்த்தது.
66 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். டோனி டி ஸோர்ஸி 35 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
இதையடுத்து களமிறங்கிய டெவால்ட் பிரேவிஸ் 28 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் விளாசிய நிலையில் ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார்.
அப்போது ஸ்கோர் 21.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 130 என இருந்தது. இதனால் இந்திய அணி எளிதாக வெற்றி பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மார்கோ யான்சன், இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறம் சிதறவிட்டார்.
மட்டையை சுழற்றிய அவர், 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசி மிரட்டினார். மறுபுறம் நிதானமாக விளையாடிய மேத்யூ ப்ரீட்ஸ்கே 55 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
மார்கோ யான்சன் அதிரடியால் தென் ஆப்பிரிக்க அணியின் பக்கம் ஆட்டம் திரும்பியது.
அந்த அணி 33 ஓவர்களில் 227 ரன்கள் குவித்தது. வெற்றிக்கு 102 பந்துகளில் 123 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. அப்போது குல்தீப் யாதவ் தனது சுழலால் மேஜிக் செய்தார்.
39 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சேர்த்து அச்சுறுத்தல் கொடுத்த மார்கோ யான்சனை ஆட்டமிழக்கச் செய்து திருப்பு முனையை ஏற்படுத்தினார்.
குல்தீப் யாதவ் வீசிய பந்தை மார்கோ யான்சன் டீப் மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு விளாச முயன்ற போது எல்லை கோட்டின் அருகே ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது.
இதே ஓவரின் 3-வது ஒவரில் மேத்யூ ப்ரீட்ஸ்கேவையும் வெளியேற்றினார் குல்தீப் யாதவ். மேத்யூ ப்ரீட்ஸ்கே 80 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய பிரனேலன் சுப்ராயன் 17 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
40 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. எனினும் கார்பின் போஷ் அதிரடியாக விளையாடி தென் ஆப்பிரிக்க அணி நம்பிக்கை கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக நந்த்ரே பர்கர் விளையாடினார்.
கடைசி 4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 38 ரன்கள் தேவையாக இருந்தது.
அப்போது அர்ஷ்தீப் சிங் வீசிய 47-வது ஓவரின் முதல் பந்தில் நந்த்ரே பர்கர் (17) ஆட்டமிழந்தார்.
இந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் மெய்டனாக வீசினார். 3 ஓவர்களில் 38 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த ஓவரில் கார்பின் போஷ் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் பறக்கவிட்டார். இந்த ஓவரில் 11 ரன்கள் சேர்க்கப்பட்டது.
அர்ஷ்தீப் சிங் வீசிய 49-வது ஓவரின் 2-வது பந்தில் கார்பின் போஷ் சிக்ஸர் விளாசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது.
முதல் பந்தில் ரன் சேர்க்கப்படாத நிலையில் அடுத்த பந்தில் கார்பின் போஷ், கவர் திசையில் நின்ற ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கார்பின் போஷ் 51 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4, ஹர்ஷித் ராணா 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.