சென்னை:
சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கியுள்ள படம், ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
1960-களின் பின்னணியில் உருவாகிஉள்ள இப் படம், ஜன. 14-ல் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் 60-களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்டகார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் வள்ளுவர் கோட்டத்தில் உயிர்ப்பித்துள்ளனர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இது கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
டிச. 21-ம் தேதி வரை இதைப் பார்வையிடலாம். இதன் அறிமுகவிழாவில் சுதா கொங்கரா, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது, “இயக்குநர் சுதா கொங்கரா, இந்தப் படத்துக்காக 5 வருடம் உழைத்திருந்தார். இந்தப்படம் செய்வது எல்லோருக்குமே கஷ்டம் தான். அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு உழைத்துள்ளார்கள்.
ஸ்ரீலீலாவை தமிழ் சினிமாவுக்கு வரவேற்கிறேன். அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடன் கஷ்டமான டான்ஸ் மூவ்மென்ட் தராததற்கு டான்ஸ் மாஸ்டருக்கு நன்றி. ரவி மோகன் சார் இந்தப்படத்துக்கு ஒப்புக்கொண்டது எனக்கு ஆச்சரியம் ஹீரோவாக கதை கேட்டுத் தேர்ந்தெடுப்பதே கஷ்டம்.
ஆனால் ஹீரோவாக ஹிட் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் போது, வில்லனாக ஒப்புக்கொள்வது மிகப்பெரிய விஷயம்.
இதுபோன்ற டீம், இந்த மாதிரி ஒரு கதை, எனக்கு 25 வது படமாகக் கிடைத்தது என் வரம். பராசக்தி அருள்தான் காரணம். பராசக்தி ஒரு முக்கியமான பிரச்சினையைப் பேசும் படம். காதல், பாசம், வீரம், புரட்சி என எல்லாவற்றையும் பேசும் படமாக இருக்கும்” என்றார்.