சென்னை:
நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் அலுவலக வளாகத்தில், விளையாட்டு மைதானங்களுடன் கூடிய மெட்ரோஸ் பூங்காவை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் நந்தனத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த வளாகத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான திறந்தவெளி நிலத்துடன், மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சொந்தமான நிலப்பகுதியையும் உள்ளடக்கி மொத்தம் 3,750 சதுரமீட்டர் பரப்பளவில், ரூ.3.50 கோடியில் மெட்ரோஸ் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலையில் 5 மணி முதல் 9 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பூங்கா திறக்கப்படும்.
இந்த விளையாட்டு மைதானத்தில் 3 பூப்பந்து விளையாட்டு அரங்குகள், 2 பிக்கிள் பந்து திறந்துவெளி விளையாட்டு அரங்குகள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.
மெட்ரோஸ் பூங்காவை சுற்றி 370 மீ நீளத்தில் நடைபகுதி, பிரத்யேக 8 வடிவ நடைபகுதி, சிறுவர்கள் விளையாட்டு பகுதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், உள் அமர்வு மற்றும் வெளியரங்க அமர்வு பகுதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பூங்காவில் 20 மழை நீர் சேகரிப்பு அமைப்புகள், பூங்காவில் உருவாகும் இலை, தழைகளை மக்கி உரமாக்க 3 கம்போஸ்ட் குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்கா மற்றும் விளையாட்டு அரங்குகளை பொதுமக்கள் இடையூறுமின்றி பயன்படுத்த ஏதுவாக, அண்ணாசாலையையொட்டி பிரத்யேக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோஸ் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், சிறப்பு முயற்சிகள் துறை செயலர் கே.கோபால், எம்எல்ஏ த.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.