சென்னை:
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்துக்கு இன்னும் 10 முறையாவது பிரதமர் மோடி வருவார் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியபோது மினி ஸ்டேடியம் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி விளக்கம் அளித்து பேசியதாவது:
அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசும்போது,தொகுதிதோறும் சிறு விளையாட்டு அரங்கங்களை கட்டவில்லை என்றார்.
தமிழகத்தில் மாநகரங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க தொகுதிவாரியாக மினி ஸ்டேடியம் அமைக்கும் உத்தரவை முதல்வர் பிறப்பித்தார்.
அதன்படி, 82 தொகுதிகளில் ஸ்டேடியம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 80 ஸ்டேடியங்களில் பணிகள் தொடங்கப்பட்டு 8 ஸ்டேடியங்கள் திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை பிப்ரவரி இறுதிக்குள் கட்டப்படும்.
ஆளுங்கட்சி– எதிர்க்கட்சி என பாரபட்சமின்றி அனைத்து தொகுதிகளிலும் இந்த முயற்சி நடக்கிறது.
ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள், 2017 மதுரையில் எய்ம்ஸ் கொண்டு வரப்போவதாகச் சொல்லி, 2019-ல் அதற்கான ஒற்றை செங்கல்லை வைத்தனர். 8 ஆண்டுகள் ஆகியும் கட்டி முடிக்கப்படவில்லை.
பிரதமர் சென்னைக்கு வந்திருக்கிறார். தேர்தல் வரப் போகிறது. இனி, 10 முறையாவது வந்துவிடுவார். அவரை மதுரைக்கு கூட்டிச்சென்று, எய்ம்ஸுக்கு விடிவுகாலம் வரச் செய்ய வேண்டும். அதற்காக தமிழக மக்கள் நன்றிசொல்வர். இவ்வாறு உதயநிதி கூறினார்.