திருவாரூர்:
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி பிரிந்துவிடும் என பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி தெரிவித்துள்ளார். திருவாரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திமுக கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு எதிரான மனப்போக்கில் உள்ளது. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி பிரிந்துவிடும். காங்கிரஸில் பெருவாரியான நபர்கள், நிர்வாகிகள், பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டுமென, தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மேலிடத்தில்கூட, ஒரு சாரார் திமுக கூட்டணி வேண்டாம் என கூறி வருகின்றனர். ஜனநாயகன் படம் தொடர்பாக தணிக்கைச் சான்றுபெற உரிய ஆவணங்களை சமர்ப்பித்தாலே பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
சான்று வழங்குவதற்கான சாத்தியகூறுகள் ஏற்படும். எனவே, இப்படம் தொடர்பாக சட்டரீதியான வழிமுறைகளை படக்குழு பின்பற்ற வேண்டும். இதைத்தான் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளன.
இந்த விவகாரத்தில் பாஜக மீது வேண்டுமென்றே பழி சொல்லக்கூடாது. தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜகவும், அதிமுகவும் நெருக்கடி கொடுக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
படத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது. அப்படி அரசியல் செய்து கொண்டிருந்தால் படம் வெளிவராமல் போய்விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.