ஓசூர் ரோஜா பூக்களுக்கு வரவேற்பு அதிகரிப்பு!!

ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் 4,000 ஏக்கரில் பசுமைக் குடில்களில் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தாஜ்மகால் (அடர் சிவப்பு) நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக். சவரன், அவலஞ்சர், பெர்னியர் உள்ளிட்ட 22 வகையான ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினத்துக்காக, வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ரோஜா ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.


கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவிலான போட்டி காரணமாக ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு குறைந்தது. மேலும், விமானக் கட்டணம் உயர்வால் விவசாயிகள் ஏற்றுமதியை தவிர்த்து, உள்நாட்டு வர்த்தகத்தில் கவனம் செலுத்துகின்றனர்.

வரும் 14-ம் தேதி காதலர் தினக்கொண்டாட்டத்துக்காக ஓசூர் பகுதி ரோஜாவுக்கான உள்நாட்டுவர்த்தகம் களைகட்டியுள்ளது.

குறிப்பாக, ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல நகரங்களுக்கு ஆன்லைன் வர்த்தகம் மூலம் ஆர்டர் அதிகரித்துள்ளதால், ஓசூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினசரி 10 லட்சம் மலர்களை அனுப்பி வருகின்றனர்.


இதுகுறித்து ரோஜா உற்பத்தியாளர் சதீஷ் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-

கார்ப்பரேட் நிறுவனங்கள் ரோஜா பூக்களை கொள்முதல் செய்கின்றனர். தேவை அதிகரித்துள்ள நிலையில், சாகுபடி பரப்பு குறைந்ததால் உற்பத்தி குறைந்துள்ளது. வழக்கமான நாட்களில் 20 பூக்கள் கொண்ட கட்டு ரூ.150-க்கு விற்பனையாகும்.

ஆனால், தற்போது ஒரு கட்டு ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையாகிறது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும்.

உள்நாட்டு வர்த்தகத்துக்கு தினசரி 2 லட்சம் ரோஜா மலர்களை விற்பனைக்கு அனுப்பி வந்தோம். தற்போது தினமும் 10 லட்சம் மலர்கள் அனுப்பி வருகிறோம்.

குறிப்பாக, தாஜ்மகால் ரோஜாவுக்கு 80 சதவீதம் ஆர்டர் கிடைத்துள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், உள்நாட்டில் வரவேற்பும், விலையும் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *