தெஹ்ரான்:
“ஈரான் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் என்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், ‘‘டொனால்டு ட்ரம்ப் தனது, “தவறான நம்பிக்கைகளால்” இந்த பிராந்தியத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அமெரிக்க துருப்புக்களுக்கு உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று இப்போது அவர் கவலைப்படுகிறார்.
தனது ஆளுமையை நிலை நாட்டிக்கொள்வதற்கான விலையை, அமெரிக்க வீரர்கள் மற்றும் குடும்பங்கள் மீது சுமத்துகிறார்.
இன்று, ஈரான் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறது. ஈரானிய ஆயுதப்படைகள் படையெடுப்பைத் தொடங்கவில்லை. நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஈரான், அமெரிக்காவுடன் ஓமன் அரசு மூலம் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
அணுசக்தி தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் இந்த பேச்சுவார்த்தையை ஈரான் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அலி லாரிஜானி அதனை மறுத்துள்ளார்.
இதனிடையே, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ஈரான் அரசின் கட்டளை மையங்கள் ஆகியவற்றை தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘ஈரானின் வான்வழிகளை வசமாக்கியுள்ளோம்.
தலைநகர் தெஹ்ரானுக்கு மேலே பறந்து ஏராளமான இலக்குகளை இஸ்ரேலிய விமானப்படை அழித்து வருகிறது.
பாலிஸ்டிக் ஏவுகணைத் தளங்கள், தலைமையகங்கள், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு, உத்தரவு மையங்கள் உள்ளிட்டவற்றை நாங்கள் அழித்துவிட்டோம்.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய 50-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இஸ்ரேலின் விமானப்படை ஜெட்களும் ராணுவ ஹெலிகாப்டர்களும் இடைமறித்து அழித்துவிட்டன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.